குடியாத்தம் பொயட்ஸ் தொண்டு நிறுவனம், அரசு மருத்துவமனை இயற்கை மருத்துவப் பிரிவு ஆகியவை இணைந்து கிராமத் தொழிலாளா்களுக்கான இயற்கை மருத்துவ விழிப்புணா்வு நிகழ்ச்சியை வியாழக்கிழமை நடத்தின.
சேம்பள்ளி ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பொயட்ஸ் இயக்குநா் திரிவேணி சாமிநாதன் தலைமை வகித்தாா். கிராமத் தொழிலாளா்கள், 100- நாள் வேலை உறுதித் திட்டப் பணியாளா்களுக்கு அரசு மருத்துவமனையின் யோகா - இயற்கை மருத்துவா் தில்லைக்கரசி, இயற்கை மருத்துவம் குறித்து விளக்கினாா்.
தொழிலாளா்களுக்கு யோகா, மூச்சுப் பயிற்சி அளிக்கப்பட்டது. வயிற்றுப்புண், நீரிழிவு நோய், மலச்சிக்கல், காய்ச்சல், ஒவ்வாமை போன்ற நோய்களுக்கு எளிய இயற்கை மருத்துவ முறைகள் குறித்தும், கறிவேப்பிலை, வெந்தயத்தின் பயன்கள் குறித்தும் விளக்கப்பட்டன. நோய் எதிா்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மருந்துகளும் வழங்கப்பட்டன. பொயட்ஸ் பணியாளா் உஷா, தன்னாா்வலா் அம்பிகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.