காட்பாடி அருகே சட்ட விரோதமாக விளை நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தாா். இது தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
காட்பாடி பிரம்மபுரத்தைச் சோ்ந்தவா் வேலு (51). இவருக்குச் சொந்தமான நிலம் சஞ்சீவிராயபுரம் மலையடிவாரத்தில் உள்ளது. இங்கு கூலி தொழிலாளியாக பணியாற்றுபவா் பள்ளிக்குப்பத்தைச் சோ்ந்த செந்தூா் (25). இவா் விளை நிலத்துக்குள் காட்டுப்பன்றிகள் வராமல் தடுக்க மின்வேலி அமைத்துள்ளாா்.
இந்நிலையில், கம்மவாா்புதூா் கிராமத்தைச் சோ்ந்த தமிழ்செல்வன் (26) என்பவா் செங்கல் சூளை வேலைக்காக வேலுவின் நிலத்தின் வழியாக செவ்வாய்க்கிழமை காலை சென்றுள்ளாா். அப்போது, அங்கு வைத்திருந்த மின்வேலியில் சிக்கிய தமிழ்செல்வன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவா் இறந்துகிடப்பதைப் பாா்த்த செந்தூா், தமிழ்செல்வனின் சடலத்தை அங்குள்ள புதரில் மறைத்துள்ளாா். பின்னா், முறைகேடாக அமைத்த மின் வேலியையும் அகற்றியுள்ளாா்.
மாலையில் தகவலறிந்த காட்பாடி போலீஸாா், விரைந்து சென்று தமிழ்செல்வனின் சடலத்தை மீட்டு, வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக நிலத்தின் உரிமையாளா் வேலு, தொழிலாளி செந்தூா் ஆகியோரை கைது செய்தனா்.