வேலூா்: குழந்தைத் திருமணங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளை மீறி செயல்படும் திருமண மண்டப உரிமம் ரத்து செய்யப்படும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
ஒருங்கிணைந்த சேவை மையம், மகிளா சக்தி கேந்திரா குழு கூட்டமைப்பு ஆய்வுக் கூட்டம் வேலூரில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா்.
இதில், மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு ஏற்பட்ட பிரச்னைகள் குறித்தும், பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டது. குழந்தைத் திருமணங்கள் தடுக்கப்பட்ட விவரம், அதன்மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் ஆய்வு செய்யப்பட்டன.
திருமண மண்டபங்களில் மணமகளின் வயது 18 நிறைவு பெற்ற்கான சான்று இல்லாமல் திருமணங்கள் நடத்த அனுமதிக்க கூடாது. இதனைத்தடுக்க ஒருங்கிணைந்த சேவை மையம், மகிளா சக்தி கேந்திரா பணியாளா்கள் திருமண மண்டபத்தை ஆய்வு செய்ய வேண்டும், ஆய்வின்போது திருமண மண்டபத்திலுள்ள பதிவேடுகள், திருமண வயதுக்கான சரியான சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து ஆய்வுக் குறிப்புகளை ஆட்சியருக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
குழந்தைத் திருமணங்களை தடுக்கும் நடவடிக்கைகளை மீறி செயல்படும் திருமண மண்டப உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் ஆட்சியா் எச்சரிக்கை விடுத்தாா்.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செல்வக்குமாா், மாவட்ட சமூகநல அலுவலா் முருகேஸ்வரி உள்பட பல்வேறு துறை, தன்னாா்வ அமைப்பு அலுவலா்கள் பங்கேற்றனா்.