அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் தேர்வில் எவ்வித குழப்பமும் இல்லை என்று தமிழக வணிகவரி பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.
வேலூர் மாவட்ட அலுவலக வளாகத்தில் தேசிய ஊட்டச்சத்து மாதநிறைவு விழா மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்டத்தின் சார்பில் மகளிர் குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா தாட்கோ மூலம் நிதி உதவி வழங்கும் விழா இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் கே. சி வீரமணி நிலோபர் கபில் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 962 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ. 54 கோடியே 24 லட்சம் கடன் உதவி, குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 1006 அங்கன்வாடி மையங்களுக்கு 4 பாய் மற்றும் 5 பழ செடிகள், தாட்கோ மூலம் 17 பேருக்கு ரூ. 3 இலட்சத்து 40 ஆயிரம் கடன் உதவிகளை வழங்கினர்.
மேலும் சிறந்த வங்கிகளுக்கு விருதுகளை அமைச்சர் கே. சி வீரமணி வழங்கினார். நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் கே.சி.வீரமணி செய்தியாளர்களிடம் கூறியது, வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இன்று மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ. 54 கோடி வரை கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கந்துவட்டி கொடுமை முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது. வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் கந்துவட்டி புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.தி.முகவினர் வேண்டுமென்றே அரசை குறை கூறி வருகின்றனர். அவர்கள் போராட்டங்களை அறிவித்து வருகின்றனர்.
இதனை மக்கள் நம்ப மாட்டார்கள் பாலாற்றில் குப்பைகள் கொட்டப்பட்டால் உடனடியாக அகற்றப்படும். அ.தி.மு.கவில் உறுப்பினர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. புதியதாக உறுப்பினர்கள் சேர்ந்து வருகின்றனர் என்றார். அப்போது முதல்வர் வேட்பாளர் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.சி வீரமணி அதில் எந்த குழப்பமும் இல்லை என்றார்.