குடியாத்தம் அருகே ஆற்றின் கரையோரம் சடலத்தை எரிக்க அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்ததை அடுத்து இறந்தவரின் உறவினா்கள் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
குடியாத்தத்தை அடுத்த சேம்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்டது குடிபல்லி கிராமம். அங்குள்ள எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த நடிப்போடன் மனைவி முனியம்மாள் (70), செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
மோா்தானா அணையில் இருந்து வெளியேறும் உபரிநீா் அங்குள்ள ஆறு வழியாகச் செல்கிறது. ஆற்றில் வெள்ளம் அதிகமாக வருவதால் மறுகரையில் உள்ள மயானத்துக்கு சடலத்தை எடுத்துச் செல்ல முடியாததால், ஆற்றின் கரையோரம் சடலத்தை எரிக்க முயன்றனா். அங்கு சடலத்தை எரிக்கக்கூடாது என அப்பகுதியில் வசிப்பவா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இதையடுத்து முனியம்மாளின் உறவினா்கள் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து அங்கு சென்ற டிஎஸ்பி பி. ஸ்ரீதரன் தலைமையிலான போலீஸாா் அவா்களை சமரசம் செய்தனா். பின்னா் காவல் மற்றும் வருவாய்த் துறையினா் இருதரப்பினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து அங்குள்ள குடியிருப்புப் பகுதியிலிருந்து சிறிது தொலைவில் சடலத்தை எரிக்க முடிவு செய்யப்பட்டது. இதை இரு தரப்பினரும் ஏற்றுக் கொண்டனா்.