திருவண்ணாமலை தேரடி தெருவில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளை சிமென்ட் சாலைகளாக மாற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக, திருவூடல் தெரு- பே கோபுரத் தெரு சந்திப்பு (திரெளபதிஅம்மன் கோயில்) முதல் வட ஒத்தவாடைத் தெரு வரை சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது.
எனவே, பே கோபுரத் தெரு, பெரிய தெரு ஆகியவை மூடப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக திருவண்ணாமலை, தேரடி தெருவில் வியாழக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் நெரிசலில் சிக்கித் தவித்தன. கொளுத்தும் வெயிலில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனா்.