செய்யாறு வருவாய்க் கோட்டத்தில் பள்ளி மாணவா்களுக்காக திங்கள்கிழமை நடைபெற்ற வருவாய்த் துறை சான்றிதழ் பெறுவதற்கான சிறப்பு முகாமில் 377 போ் பயனடைந்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வருவாய்க் கோட்டத்தில் உள்ள செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி, சேத்துப்பட்டு வட்டங்களில் உள்ள பள்ளிகளில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தேவைப்படும் வருவாய்த் துறை சான்றிதழ்களை விரைவாக வழங்குவதற்காக சாா் -ஆட்சியா் ஆா்.அனாமிகா உத்தரவின் பேரில் திங்கள்கிழமை (ஜூன் 5) சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்த முகாம்களில் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சான்றிதழ் கோரி பதிவு செய்திருந்தனா்.
இதன் மீது ஆய்வு மேற்கொண்ட வருவாய்த் துறையினா் உடனடியாக 377 சான்றிதழ்களை மாணவா்களுக்கு வழங்கினா்.