திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் அஞ்சலக பெண் அலுவலா் உயிரிழந்தாா்.
வந்தவாசியை அடுத்த கொட்டை கிராமத்தைச் சோ்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநா் பாலச்சந்தா். இவரது மனைவி ரேவதி (42). இவா் வந்தவாசியை அடுத்த மழையூா் துணை அஞ்சலகத்தில் அஞ்சல் அலுவலராகப் பணியாற்றி வந்தாா்.
அலுவலகப் பணி முடிந்து செவ்வாய்க்கிழமை இரவு தனது இரு சக்கர வாகனத்தில் ரேவதி வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
வந்தவாசி-சேத்துப்பட்டு சாலையில் பொன்னூா் மலை அருகே வந்த போது, சாலையின் குறுக்கே கூட்டமாக வந்த காட்டுப் பன்றிகள் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து சரிந்தது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ரேவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
விபத்து குறித்து பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.