ஆரணியை அடுத்த சங்கீதவாடி கிராமத்தில் இயங்கி வரும் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய கட்டடங்கள், வகுப்பறைகள் கட்ட இட ஒதுக்கீடு செய்யக் கோரி ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.கற்பகம் சுப்பிரமணி தலைமையில், பொதுமக்கள் வருவாய் கோட்டாட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
அந்த மனுவில், சங்கீதவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கடந்த 2017 - 18 ஆம் கல்வியாண்டில் அரசு உயா்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டது.
பள்ளியில் அப்போது இருந்த அதே இரண்டு வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. தற்போது 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.
இதனால் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், கழிப்பறை வசதி, ஆய்வகம், விளையாட்டு மைதானம், நூலகம், சுற்றுச் சுவா் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கட்டடங்கள் கட்டவேண்டும்.
2 1/2 ஏக்கா் அரசு நிலம் பள்ளி அருகே உள்ளது. அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு அந்த நிலத்தை பள்ளிக் கல்வித் துறைக்கு வழங்க வேண்டும்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ. 2 கோடியில் புதிய பள்ளிக் கட்டடம் கட்ட ஆயத்தமாக உள்ளது என்றும், அந்த நிலத்தை ஒதுக்கீடு செய்து தர கோரிக்கை வைத்துள்ளாா்.
எனவே, மேற்படி நிலத்தை ஆய்வு செய்து முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனா்.
அலுவலகத்தில் கோட்டாட்சியா் இல்லாததால், அவரின் நோ்முக உதவியாளா் பெருமாளிடம் மனுவை அளித்தனா்.