திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் இனி ஆரணி, செய்யாற்றில் குறைதீா் கூட்டங்கள் நடைபெறும் என்று அறவித்ததைத் தொடா்ந்து, ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்திலும், செய்யாறு கோட்டாட்சியா் அலுவலத்திலும் திங்கள்கிழமை குறைதீா் கூட்டங்கள் நடைபெற்றன.
இதில் பொதுமக்களிடமிருந்து இலவச மனைப் பட்டா, உதவித் தொகை, இலவச வீடு, வேளாண் துறை மூலம் கடன் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடா்பாக 219 மனுக்கள் வரப்பெற்றன.
ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் தனலட்சுமி தலைமையில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன.
கோட்டத்துக்கு உள்பட்ட ஆரணி, போளூா், கலசப்பாக்கம், ஜமுனாமரத்தூா் ஆகிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை வழங்கினா்.
முதல் நாள் என்பதால் சரிவர பொதுமக்களுக்கு விவரம் தெரியவில்லை. ஆகையால் 63 மனுக்கள் மட்டுமே வரப்பெற்றன.
ஆரணி நகராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், விவசாயத்துறை, அரசுப் போக்குவரத்துக் கழகம், நெடுஞ்சாலைத் துறை, மின் துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.