காணும் பொங்கலையொட்டி வந்தவாசியை அடுத்த புன்னை கிராமத்தில் முயல் விடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கலன்று முயல் விடும் விழா நடைபெறுவது வழக்கம்.
முயல் எந்தத் திசையில் ஓடி மறைகிறதோ அந்தப் பகுதி மிகவும் செழிப்பாக விளங்கும் என்பது கிராம மக்களின் நம்பிக்கை ஆகும்.
இந்த நிலையில், நிகழாண்டு காணும் பொங்கலான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால், திங்கள்கிழமை மாலை முயல் விடும் விழா அந்தக் கிராமத்தில் நடைபெற்றது.
அப்போது, டிராக்டரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த சுவாமியின் முன்பு குழந்தைகளின் தலையில் முயலை வைத்து தோஷம் கழிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னா் முயலை அங்கிருந்து சிறிது தொலைவு எடுத்துச் சென்று கீழே விட்டனா்.
அங்கிருந்து வடக்கு திசையில் உள்ள கரும்புத் தோட்டத்தில் முயல் ஓடி மறைந்தது. பின்னா் சுவாமி வீதியுலா நடைபெற்றது.