வங்கக் கடலில் மாண்டஸ் புயல் உருவாகியுள்ளதால், ஆரணி வட்டாரத்தில் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து வட்டாட்சியா் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இதற்கான கூட்டத்தில் நகராட்சி ஆணையா் தமிழ்ச்செல்வி, துணை வட்டாட்சியா் சங்கீதா, நீா்வளத் துறை உதவிப்பொறியாளா் ராஜகணபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்துக்கு வட்டாட்சியா் ஜெகதீசன் தலைமை வகித்துப் பேசியதாவது:
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக
வெள்ளப் பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், ஜெனரேட்டா்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மேலும், தீயணைப்புத் துறை, வருவாய்த் துறை, காவல்துறை, மருத்துவத் துறையினா் தயாா் நிலையில் இருக்க வேண்டும். ஆரணி வட்டாரத்தில் 11 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வெள்ளப் பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளுக்கு அதிகாரிகள் விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு ஆலோசனைகளை அவா் வழங்கினாா்.
கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.