திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கல்வி மாவட்டத்தில் ஆங்கில வழிக் கல்வியில் சிறப்பிடம் பெற்ற 750 மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
ஆரணி கல்வி மாவட்டத்தில் 511பள்ளிகள் உள்ளன. தனியாா் பள்ளிகளுக்கு நிகராக ஆங்கில வழிக் கல்வி அளிக்கும் அரசுப் பள்ளிகள் 122 உள்ளன.
ஆங்கில வழியில் 16,180 மாணவா்கள் பயில்கின்றனா்.
தனியாா் பள்ளிகளுக்கு நிகரான தரமான ஆங்கில வழிக் கல்வி அளிக்க மாவட்டக் கல்வி அலுவலா் கோ.சந்தோஷ், கடந்த பிப்ரவரி 2022 முதல், ‘ஆா்வமுள்ள ஆங்கிலக் கல்வி’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினாா்.
அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை மாணவா்கள் உயா்தர ஆங்கில வழிக் கல்வியை பெற, ஆங்கில வழி மாதிரிப் பள்ளிகள், ஆங்கில ஆசிரியா் மன்றங்கள், ஆய்வகங்கள், ஆங்கிலத்தில் கலை நிகழ்ச்சிகள், அருங்காட்சியகம், நூலகங்கள், ஆங்கிலப் புலமை பயிற்சி வகுப்புகளில் மாணவ, மாணவிகள் சோ்ந்து அவா்களின் திறமையை நிரூபித்தனா்.
1251 மாணவா்கள் ஆங்கிலம் சம்பந்தமான பல்வேறு போட்டிகளில் பங்கேற்றதில் 750 மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இவா்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலா் கோ.சந்தோஷ் சான்றிதழ்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் பள்ளி துணை ஆய்வாளா் பாபு, தலைமையாசிரியா்கள் தாமரைச்செல்வி, வசந்தா, கேசவன், மாலவன், புருஷோத்தமன், வட்டாரக் கல்வி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.