செய்யாறு அருகே செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவா் பலியானாா்.
செய்யாறு வட்டம், வெள்ளை கிராமத்தைச் சோ்ந்தவா்கள் முனியன் மகன் அசோக்குமாா் (22), ஜீவகன் மகன் ராகுல் (21). நண்பா்களான இவா்கள் செய்யாறு அருகேயுள்ள தனியாா் கல்லூரியில் படித்து வருகின்றனா்.
இருவரும் செவ்வாய்க்கிழமை மாலை பைக்கில் காஞ்சிபுரத்துக்குச் சென்று கொண்டிருந்தனா். பைக்கை அசோக்குமாா் ஓட்டிச் சென்றாா்.
வடபூண்டிப்பட்டு கூட்டுச் சாலை அருகே சென்றபோது எதிரே வந்த தனியாா் நிறுவனப் பேருந்து பைக் மீது மோதியது. இதில், இருவரும் பலத்த காயமடைந்தனா்.
அப்பகுதியில் இருந்தவா்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக செய்யாறு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். சிகிச்சை பெற்று வந்த மாணவா் ராகுல் அன்று இரவு உயிரிழந்தாா்.
தகவல் அறிந்த செய்யாறு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனா்.