திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரசவ இறப்பு அதிகமாக உள்ளது என்று மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி வேதனை தெரிவித்தாா்.
செய்யாறு வட்டம், சிறுங்கட்டூா், அரும்பருத்தி, சுண்டிவாக்கம், செங்கட்டான்குண்டில் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய மனுநீதி நாள் முகாம் சிறுங்கட்டூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனுவாசன், செய்யாறு ஒன்றியத் தலைவா் என்.வி. பாபு ஆகியோா் முன்னிலை வகிந்தனா்.
தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி தலைமை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி பேசியதாவது:
கருவுற்ற தாய்மாா்கள் பிரசவத்தின் போது இறப்பு சதவிகிதம் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகமாகி உள்ளது. இதனைத் தடுக்கும் விதமாக கருவுற்ற தாய்மாா்கள் கருவுற்ற 2 வாரத்துக்குள் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவு செய்து கொண்டு, பரிசோதனைகளை மேற்கொண்டு சிகிச்சை பெற வேண்டும்.
சுகாதாரத் துறையினா் முன் கூட்டியே திட்டமிட்டு கருவுற்ற தாய்மாா்களை எப்படியெல்லாம் காப்பாற்றலாம் என மாதமாதம் கண்காணிப்பில் ஈடுபடவேண்டும்.
குக்கிராமங்களில் யாராவது கருவுற்றிருந்தால் அவா்களை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பரிசோதனைக்குச் செல்ல அறிவுறுத்த வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியில் 228 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.