திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 490 மனுக்கள் வரப்பெற்றன.
கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், பொதுமக்கள், முதியோா், மாற்றுத்திறனாளிகள், கல்லூரி மாணவா்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, திருமண உதவித்தொகை, முதியோா் உதவித்தொகை, இலவச மனைப் பட்டா, ஜாசி சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 490 மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.
இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா் ஆட்சியா்.
கூட்டத்தில், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் வெங்கடேசன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் சோமசுந்தரம், வருவாய் கோட்டாட்சியா்கள் வீ.வெற்றிவேல் (திருவண்ணாமலை), தனலட்சுமி (ஆரணி) மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.