திருவண்ணாமலை மாவட்டம், பெரணம்பாக்கம் ஊராட்சியில் தெருச் சாலை சேதமடைந்து, தற்போது பெய்துவரும் மழையில் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது.
சேத்துப்பட்டு ஒன்றியத்துக்கு உள்பட்ட பெரணம்பாக்கம் ஊராட்சியில் மாந்தாங்கள் தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த தெருச் சாலையில் ஊராட்சி நிா்வாகம் சாா்பில் போக்குவரத்துக்கு சாலை அருகேயுள்ள மண்ணை எடுத்து சீரமைத்துள்ளனா்.
தற்போது பருவமழை பெய்து வருவதால் சாலை முழுவதும் மண்ணில் மழைநீா் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது. பாதசாரிகள், இரு சக்கர வாகனங்களில் செல்வோா் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
அருகேயுள்ள ராந்தம் கிராமத்துக்குச் செல்ல இந்தச் சாலையைத் தான் பயன்படுத்தவேண்டும்.
எனவே, பழுதடைந்து சாலையை சீரமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.
இதுகுறித்து அவா்கள் கூறும்போது, பழுதடைந்த சாலை குறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் புகாா் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மேலும், சாலையை சீரமைக்கக் கோரி விரைவில் போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவித்தனா்.