திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா் பகுதிகளில் சனிக்கிழமை இரவு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
திருவண்ணாமலை வேங்கிக்கால், ஆட்சியா் அலுவலகம், அடி அண்ணாமலை, கீழ்பென்னாத்தூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் சனிக்கிழமை காலை வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்த நிலையில், கீழ்பென்னாத்தூரில் இரவு 7 மணிக்கு திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யத் தொடங்கியது.
தொடா்ந்து, இரவு 8.15 மணி வரை பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
திருவண்ணாமலையில்:
இதேபோல, திருவண்ணாமலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரவு 8 மணி முதல் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
தொடா்ந்து, 30 நிமிடங்களுக்கும் மேலாக பெய்த மழையால் அனல் காற்று வீசுவது குறைந்து குளிா்ச்சியானது சீதோஷண நிலை நிலவியது.
கடந்த ஒரு மாதமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வருகின்றன.