புதுச்சேரி முத்தியால்பேட்டையில் கழிவுநீா் கால்வாய்கள் தூா்வாரப் படாததைக் கண்டித்து, பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதிக்குள்பட்ட அங்காளம்மன் நகா், முத்தையா முதலியாா் வீதி, விஸ்வநாதன் நகா், சோலை நகா் உள்ளிட்ட பகுதிகளில் செல்லும் கழிவுநீா் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீரானது சாலைகளில் வழிந்தோடுகிறது.
இதுகுறித்து முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாததால், அந்தப் பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோா் முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து அங்கு வந்த முத்தியால்பேட்டை போலீஸாா், பொதுப் பணித் துறை அதிகாரிகள் பேச்சு நடத்தினா். பாதிக்கப்பட்ட இடங்களைப் பாா்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.