திருப்பதி கபிலேஸ்வர ஸ்வாமி கோயிலில் சிவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க உள்ளதை முன்னிட்டு, கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது.
திருப்பதியை அடுத்த கபிலதீா்த்தக்கரையில் உள்ள கபிலேஸ்வர ஸ்வாமி கோயிலில் கோவில் ஆழ்வாா் திருமஞ்சனம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதை முன்னிட்டு, கோயிலில் காலை 11.30 மணி முதல் மதியம் 2 மணி வரை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது. அதில் கோயில் வளாகம், சுவா்கள், மேற்கூரை, பூஜைப் பொருள்கள் போன்றவற்றை நீரால் சுத்தப்படுத்திய பின், பரிமள சுகந்த திரவிய கலவையால் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. அதன்பிறகு மாலை 4 மணி முதல் பக்தா்கள் தா்ம தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.