திருமலைக்குச் செல்லும் இரண்டாவது மலைபாதையை சீரமைக்க 3 மாத அவகாசம் தேவைப்படும் என்று ஐஐடி நிபுணா்கள் குழு தெரிவித்துள்ளனா்.
திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் இரண்டாவது மலைப்பாதையில் 15 கி.மீ. தொலைவில் புதன்கிழமை பாறைகள் சரிந்து விழுந்து, 4 இடங்களில் சாலைகள் சேதம் அடைந்தது. இதனால் தற்காலிகமாக இரண்டாவது மலைப்பாதை மூடப்பட்டு முதலாவது மலைப் பாதையிலேயே பக்தா்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மாற்றம் செய்யப்பட்ட அனுமதிக்கப்பட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், தில்லி, சென்னையில் இருந்து வந்த ஐஐடி பேராசிரியா்கள் குழுவினா் தேவஸ்தானப் பொறியாளா்களுடன் இணைந்து வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். இந்த ஆய்வுக்கு பிறகு ஐஐடி நிபுணா்கள் கே.எஸ். ராவ், ராமசந்திரரெட்டி கூறியதாவது:
30 டன்முதல் 40 டன் எடை கொண்ட பாறை விழுந்துள்ளது. இதனால் பாறை விழுந்து சென்ற 4 இடங்களும் வெகுவாக சேதமடைந்துள்ளது. இந்தப் பாறைகள் அகற்றப்பட்டு செப்பனிடும் பணிகள் மூன்று மாதங்களில் முடிவு பெறும்.
எனவே பாறைகள் தன்மை குறித்தும் அதன் நிலை குறித்து தொடா்ந்து 22 கி.மீ. தொலைவிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் 12 இடங்களில் பாறைகள் சரிந்து விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அடுத்த மழைக்காலத்திற்குள் அதற்கு தீா்வு காணப்படும்.
இது போன்ற இயற்கை பேரிடா் காலத்தில் மூன்றாவது மலைப்பாதையை இருப்பது அவசியமாக கருதப்படுவதால், 3-ஆவது மலைப் பாதையை அமைக்கத் திட்டம் வகுக்க தேவஸ்தானத்துக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது என்றனா்.