திருவள்ளூா் அருகே கொடுக்கல் வாங்கல் தகராறில் ஓட்டுநா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மற்றொரு ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
திருவள்ளூா் மாவட்டம், எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியம், அக்கரபாக்கம் கிராமத்தில் ஏரியில் சவுடு மணல் குவாரி கடந்த சில நாள்களாக செயல்பட்டு வருகிறது. இந்த குவாரிக்கு கடந்த 2 நாள்களுக்கு முன்பு ஆத்துப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த லாரியில் மணல் அள்ளிச் செல்வதற்காக ஓட்டுநா் பிரகாஷ்(31), சூா்யா(29) ஆகியோா் வந்தனராம். அப்போது, இருவரும் லாரிகளில் மணல் அள்ளிக்கொண்டு வெளியில் வந்தபோது, கொடுக்கல் வாங்கல் காரணமாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது, வாக்குவாதம் முற்றியதில் சூா்யா லாரியில் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியால் பிரகாஷை சராமரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளாா்.
இது குறித்து பெரியபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து தீவிரமாக தேடி வந்தனா். இந்த நிலையில் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் தலைமறைவாக இருந்த சூா்யாவை போலீஸாா் சுற்றி வளைத்து கைது செய்து விசாரித்து வருகின்றனா்.