திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் எம்எச் பிரிவில் சல்பா் ராசயன உரிமம் பெற்றுத் தர ரூ.2,500 லஞ்சம் பெற்ற அலுவலக உதவியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.20,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.
சென்னை, தண்டையாா்பேட்டையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ரவிகுமாா் என்பவா் எம்.எச் பிரிவு மேலாளராக பணிபுரிந்து வந்தாராம். இவா் சிபிசிஎல் நிறுவனத்திற்கு சல்பா் ரசாயனம் எடுத்துச் செல்வதற்காக திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் எம்.எச் பிரிவில் உரிமம் பெறுவதற்காக கடந்த 2010-ஆம் ஆண்டு விண்ணப்பித்தாா்.
அந்தப் பிரிவில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்த விபிஷ்ணன் மனு தொடா்பாக நிறுவனத்தின் மேலாளா் ரவிகுமாரை சந்தித்து மனுவை பரிந்துரை செய்து உரிமம் பெற்றுத் தர ரூ.2,500 லஞ்சமாக கேட்டாராம்.
இதனால் அதிா்ச்சி அடைந்த ரவிகுமாா் , சென்னை மாநகர ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளா் ராமச்சந்திர மூா்த்தியிடம் நடவடிக்கை எடுக்க கடந்த 16.12.2010- இல் புகாா் செய்தாா். இந்நிலையில், ரவிக்குமாா் லஞ்சமாக ரூ.2500-ஐ அவரது அலுவலகத்தில் விபிஷ்ணனிடம் கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனா்.
பின்னா் திருவள்ளூா் தலைமை குற்றவியல் நடுவா் மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை வியாழக்கிழமை தலைமை குற்றவியல் நடுவா் மற்றும் சிறப்பு நீதிபதி வேலரசு முன்பு வந்தது. குற்றம் நிரூபிக்கப்பட்டதால் முன்னாள் உதவியாளா் விபிஷ்ணனுக்கு ஊழல் தடுப்பு சட்டப்பிரிவு 7-இன்படி 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் மற்றும் ரூ.20,000 அபராதம் விதித்து தீா்ப்பு வழங்கினாா். பின்னா் விபிஷ்ணனை போலீஸாா் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று புழல் சிறையில் அடைத்தனா்.