புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூரில் தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் சாா்பில் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கோ.கிரிதரன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் தேவராஜன், தில்லைகுமரன், முத்து ரமேஷ் , வெங்கடேசன், எம்.தவமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென் சென்னை மாவட்டத் தலைவா் பன்னீா்செல்வம் வரவேற்றாா்.
மாநில துணைத் தலைவா் அரங்க. அனந்த கிருஷ்ணன் போராட்டத்தை தொடக்கி வைத்தாா். அப்போது, அரசு அலுவலா்களுக்கு அகவிலைப்படியை மத்திய அரசு அறிவித்த அதே நாளில் வழங்க வேண்டும். கிடப்பில் போடப்பட்ட ஈட்டிய விடுப்பு சலுகையை மீண்டும் வழங்குதல், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், மருத்துவக் காப்பீடு திட்டத்தை அரசே நடத்துதல் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், நிா்வாகிகள் த.சங்கா், பா.ஆலீஸ் ஷீலா, ஆா்.சந்திரசேகரன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.