ஆவடி அருகே பட்டாபிராம் போக்குவரத்து பிரிவு போலீஸார் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
ஆவடி மாநகர போக்குவரத்து பிரிவு காவல் துணை ஆணையர் ஜெயலட்சுமி தலைமை வகித்து, பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
திருநின்றவூர், பிரகாஷ் நகரில் உள்ள தனியார் பள்ளியில் தொடங்கிய பேரணி சி.டி.எச் சாலை வழியாக திருநின்றவூர் காந்தி சிலையை வந்தடைந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
பேரணியில், மாணவர்கள், இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது தலைக்கவசம் அணிவது, போக்குவரத்து விதிகளை கடைப்பிடிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் வழங்கினர்.
தனியார் பள்ளித் தாளாளர் கனகராஜ், பட்டாபிராம் போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் சுபாஷினி மற்றும் உதவி-ஆய்வாளர்கள், மாணவ-மாணவர்கள் கலந்து கொண்டனர்.