ஆவடி அருகே புதிய வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ. 9,000 லஞ்சம் வாங்கியதாக மின் வாரிய வணிக ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
ஆவடி அருகே கோயில்பதாகையைச் சேர்ந்தவர் இத்ரிஷ் (42), கார் ஓட்டுநர். இத்ரிஷ் கோயில்பதாகை, புனித பிரான்சிஸ் நகரில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதையடுத்து, அவர் அந்த வீட்டுக்கு தனது மனைவி அஸ்மத் நிஷாவின் பெயரில் தற்காலிக மின் இணைப்பு கேட்டு, கோயில்பதாகை மின்சார வாரிய உதவிப் பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.
இதை ஆய்வு செய்து மின் இணைப்பு வழங்க மின்சார வாரிய வணிக ஆய்வாளர் அரக்கோணம், விண்டர்பேட்டையில் வசிக்கும் பாளையம் (50) என்பவர் ரூ. 9,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதைக் கொடுக்க விரும்பாத இத்ரிஷ், திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து, டிஎஸ்பி (பொறுப்பு) கலைச்செல்வன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீஸார், ரூ. 9,000-க்கு ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை இத்ரிஷிடம் வழங்கி, அதனை பாளையத்திடம் கொடுக்குமாறு அறிவுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து, இத்ரிஷ் லஞ்சப் பணத்தை கோவில்பதாகை மின் வாரிய அலுவலகத்தின் முன்பு பாளையத்திடம் செவ்வாய்க்கிழமை வழங்கினார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், பாளையத்தை கையும் களவுமாக பணத்துடன் பிடித்தனர்.
புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் சுமித்ரா தலைமையில், லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, பாளையத்தை கைது செய்தனர்.