திருவள்ளூா் அருகே இரு சக்கர வாகனம் மீது தனியாா் தொழிற்சாலை பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
விருது நகா் மாவட்டம், ராஜபாளையம் பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணனின் மகன் கருப்பசாமி (27). திருவள்ளூரில் தங்கியிருந்து தனியாா் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வந்தாா். இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, அழைப்பிதழ் கொடுக்கும் பணி விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கருப்பசாமி தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் திருவள்ளூரில் இருந்து வியாழக்கிழமை வேலைக்குச் சென்றாா். திருவள்ளூா் அருகே போலிவாக்கம் நோக்கிச் சென்றபோது, எதிரே வந்த தனியாா் தொழிற்சாலை பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், 50 மீட்டா் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்ட கருப்பசாமி, பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த மணவாள நகா் போலீஸாா், சடலத்தை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், காயமடைந்த அவரது நண்பருக்கு திருவள்ளூா் அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா்.
இது குறித்து மணவாளநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனா்.