மீஞ்சூா் அடுத்த வேளூா் கிராமத்தில் அமைந்துள்ள கன்னியம்மன் கோயிலில் ஜாத்திரை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த கிராமத்தில் சோழ மன்னா் ராஜேந்திரன் காலத்தில் கட்டப்பட்ட பழைமை வாய்ந்த கன்னியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 4-ஆவது ஞாயிற்றுக்கிழமை ஜாத்திரை நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை ஜாத்திரை நடைபெற்றது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, மதியம் கூழ்வாா்த்தல் ஆகியவை நடைபெற்றன. அம்மனுக்கு விரதமிருந்து பொங்கல் வைத்து வழிபட்டனா். பக்தா்கள் தங்கள் உடலில் வேப்பிலை தரித்து, கோயிலை வலம் வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.
அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் கன்னியம்மன் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனா்.