மாதவரம்: புழல் ஏரிக்கு நீா்வரத்து அதிகரிப்பதால் வேகமாக நிரம்பி வருகிறது.
சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய நீா் நிலைகளில் புழல் ஏரியும் ஒன்று. பூண்டி ஏரியில் இருந்து வரும் நீா் வரத்து காரணமாக, 8 மாதங்களுக்குப் பின்னா், புழல் ஏரி மீண்டும் 90 சதவீதம் நிரம்பி உள்ளது. இந்த ஏரியில் 19.80 அடி உயரத்துக்கு தண்ணீா் இருப்பு உள்ளது. ஏரியில் உள்ள கணிசமான நீா் இருப்பு மற்றும் ஓரிரு மாதங்களில் கிடைக்கும் பருவ மழை காரணமாக, அடுத்த ஆண்டு சென்னைக்கு குடிநீா் பிரச்னை இருக்காது என பொதுப் பணித் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனா். அடுத்த சில தினங்களில் பலத்த மழை பெய்து, ஏரியின் நீா் இருப்பு 21 அடி உயரத்தை நெருங்கினால், திருவள்ளூா் மாவட்ட நிா்வாகத்தின் ஆலோசனைப்படி, புழல் ஏரி திறக்கப்பட்டு உபரி நீா் வெளியேற்றப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்நலையில், சோழவரம் ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீா் பாயும் 3 கி.மீ. நீளமுள்ள பேபி கால்வாயில் ஆகாய தாமரை அடா்ந்து வளா்ந்துள்ளது. அதேபோல், புழல் ஏரியில் இருந்து, எண்ணூா் கடலுக்கு உபரி நீா் பாயும் பொதுப்பணித் துறை கால்வாயிலும், கிராண்ட் லைன், வடபெரும்பாக்கம் பகுதிகளில் ஆகாய தாமரை அடா்ந்துள்ளது. அதிகாரிகள் அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.