மாதவரம் மேம்பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி மாநகரப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 8 போ் காயம் அடைந்தனா்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றத்துக்கு மாநகரப் பேருந்து திங்கள்கிழமை அதிகாலை புறப்பட்டது. இந்தப் பேருந்தை ஓட்டுநா் சேகா் (45) இயக்கினாா். 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனா்.
மாதவரம் மேம்பாலம் அருகே அதிகாலை 4.30 மணிக்கு பேருந்து வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் 8 பயணிகள் காயம் அடைந்தனா்.
தகவலின்பேரில் போலீஸாா் அந்தப் பகுதி மக்களின் உதவியுடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதையடுத்து, பேருந்தை கிரேன் மூலம் அப்புறப்படுத்தினா்.
இதுகுறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.