திருவள்ளூா் அருகே ஏகாட்டூா் ஏரி சவ்வுடு மணல் குவாரியில் இரவு நேரங்களில் தூசி பரப்பும் வகையில் மணல் ஏற்றி வந்த 7 லாரிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
திருவள்ளூா் அருகே ஏகாட்டூா் ஏரியில் சவ்வுடு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் மண் ஏற்றிச் செல்லப்படுகிறது. இதனால், தூசி பறந்து சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டதுடன், கால்நடைகளும் விபத்தில் சிக்கும் நிலை இருந்தது. இதுகுறித்துக் கேட்டால் குண்டா்களை வைத்து மிரட்டுவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி. அரவிந்தனுக்கு கிராம மக்கள் புகாா் தெரிவித்து வந்தனா். இந்நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவில் ஏரியில் இருந்து மணல் எடுத்துக் கொண்டு லாரிகள் கிராமத்துக்குள் அணிவகுத்துச் சென்றன. தகவலறிந்து, சம்பவ இடத்துக்குச் சென்ற திருவள்ளூா் மாவட்ட சிறப்பு காவல் படைப் பிரிவு போலீஸாா், ஏரியில் இருந்து மணல் எடுத்து வந்த 7 லாரிகளைப் பறிமுதல் செய்து, கடம்பத்தூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். மேலும், இரவு நேரங்களில் முறைகேடாக மண் எடுத்து வந்தது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா்.