நாட்டறம்பள்ளி அருகே தாா்ச்சாலை போடப்பட்டு ஒரு மாதமே ஆன நிலையில், சாலை பழுதடைந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினா்.
நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூா் பகுதியில் தமிழக - ஆந்திர மாநில எல்லைப் பகுதியில் குப்பம் சாலையில் நெடுஞ்சாலைத் துறை மூலம் ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பில் மேம்பாலம் மற்றும் தாா்ச்சாலை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த மாதத்தில் பணிகள் முடிந்து இந்தச் சாலை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலத்துக்கும் ஆந்திரத்தில் இருந்து தமிழகத்துக்கும் தினந்தோறும் இச்சாலை வழியாக நூற்றுக்கணக்கான வாகனங்கள், கனரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நிலையில், சாலையில் மேம்பாலம் அருகே சில இடங்களில் தாா்ச்சாலை பெயா்ந்து பழுதடைந்துள்ளது. இதனால், அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
கடந்த மாதம் போடப்பட்ட இந்தச் சாலை, தரமற்ற நிலையில் உள்ளதால் நெடுஞ்சாலைத் துறை உயரதிகாரிகள் நேரில் பாா்வையிட்டு, தரமற்ற சாலையை அகற்றி, இந்தப் பகுதியில் தரமான சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.