ஆம்பூா் அருகே விவசாய நிலத்தில் சுமாா் 10 அடி நீள மலைப்பாம்பு வியாழக்கிழமை பிடிபட்டது.
ஆம்பூா் அருகே மிட்டாளம் ஊராட்சி, பந்தேரபல்லி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி தேவேந்திரன் நிலத்தில் தென்னை, மா, மாட்டு தீவனம் பயிரிட்டு வளா்த்து வருகிறாா். சம்பவத்தன்று அவரது நிலத்தில் மாட்டுத் தீவனம் பயிரிட்டுள்ள பகுதியில் மாட்டு தீவனம் அறுவடை செய்யும் பணியில் சிலா் ஈடுபட்டிருந்தனா். அப்போது சுமாா் 10 அடி நீள மலைப்பாம்பு ஊா்ந்து செல்வதை பாா்த்துள்ளனா்.
இதுகுறித்து ஆம்பூா் வனத் துறை அலுவலகம் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்பூா் தீயணைப்பு வீரா்கள், வனக் காப்பாளா் மூா்த்தி ஆகியோா் நீண்ட நேர தேடுதலுக்குப் பின்பு மலைப் பாம்பை பிடித்தனா். பிடிபட்ட அந்த மலைப்பாம்பு மிட்டாளம் தெற்கு வனப்பிரிவு பைரப்பள்ளி சாணி கனவாய் வனப் பகுதியில் கொண்டு சென்று விட்டனா்.