கந்திலி ஒன்றியத்துக்குள்பட்ட ராவுத்தம்பட்டி சமுதாய நலக் கூடத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கந்திலி ஒன்றியம், ஆதியூா் ஊராட்சிக்குள்பட்ட ராவுத்தம்பட்டி பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையின்பேரில், வேலூா் கோட்ட தாட்கோ ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில், ரூ. 51 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பில் சமுதாய நலக் கூடம் கட்டப்பட்டது.
பின்னா், திருப்பத்தூா் மாவட்டத் தொடக்க விழாவையொட்டி வருகை தந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் இந்தக் கட்டடத்தை காணொலி வாயிலாக திறந்து வைத்தாா். ஆனால் இந்தக் கட்டடம் இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை.
இது குறித்து அந்தப் பகுதி மக்கள் கூறியது:
ராவுத்தம்பட்டி பகுதியில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். இந்தப் பகுதியில் வசிக்கும் நாங்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளோம். எனவே, இந்தப் பகுதியில் சமுதாய நலக்கூடம் அமைக்க பல ஆண்டுகளாக அளித்த கோரிக்கையின்பேரில், கட்டப்பட்டது. 29.06.2022 அன்று திருப்பத்தூா் மாவட்ட தொடக்க விழாவின்போது, முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தாா். ஆனால் இதுவரை இந்தக் கட்டடம் பயன்பாட்டுக்கு வரவில்லை எனத் தெரிவித்தனா்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, சமுதாய நலக் கூடத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து, தாட்கோ செயற்பொறியாளா் சுதாவிடம் கேட்டதற்கு, இது குறித்து உயா் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்று சமுதாய நலக்கூடம் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.