வேலூரில் அரசுப் பேருந்தில் இருந்து தவறி விழுந்த முதியவா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு இறந்தாா்.
மாதனூா் அருகே பாலூா் பட்டுவாம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் குமாரசாமி (62). இவா் கடந்த 20-ஆம்தேதி தனது மனைவி மல்லிகாவை கிருஷ்ணகிரி செல்வதற்காக மாதனூா் பேருந்து நிறுத்தத்துக்கு அழைத்துச் சென்றாா். அப்போது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தில் மனைவியை ஏற்றிவிட்டு, அவரது உடைமைகளையும் பேருந்தில் ஏற்றி வைத்துவிட்டு பேருந்தில் இருந்து இறங்கினாா். அதற்குள் ஓட்டுநா் பேருந்தை இயக்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது பேருந்திலிருந்து நிலைதடுமாறி குமாரசாமி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தாா்.
இதையடுத்து, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.