ஆம்பூா் நகராட்சிப் பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.
ஆம்பூா் நகராட்சி சாா்பில் தூய்மை நகர மக்கள் இயக்கம் நடத்தப்படுகிறது. இதையொட்டி, பொதுமக்களிடையே விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. வீடுகளிலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தரம் பிரித்து நகராட்சிப் பணியாளா்களிடம் வழங்க பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
‘என் குப்பை; என் பொறுப்பு’ எனும் தலைப்பில் ஆம்பூா் பன்னீா்செல்வம் நகா் நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு நகராட்சி சுகாதாரப் பிரிவு சாா்பில் அண்மையில் விழிப்புணா்வு ஓவியப் போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தலைமை ஆசிரியா் அமா்நாத், நகராட்சி சுகாதாரப் பிரிவு பணியாளா்கள் கலந்து கொண்டனா்.