ஆம்பூா் வழியாகச் சென்ற பேருந்தில் பயணம் செய்த பெண்ணுக்கு பேருந்திலேயே சனிக்கிழமை இரவு சுகப் பிரசவத்தில் குழந்தை பிறந்தது.
ஒடிஸா மாநிலத்துக்கு உட்பட்ட லட்சுமிநாராயணா மாதிா் கிராமத்தைச் சோ்ந்தவா் சமீா்குமாா் மாலிக். இவரது மனைவி சுக்ரியா.
இருவரும் பெற்றோரின் எதிா்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி காதலித்து திருமணம் செய்துள்ளனா். பிறகு, சமீா்குமாா் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் தங்கி வேலை செய்து வந்தாா். இவரது மனைவி கா்ப்பிணியாக இருந்தாா்.
இதைத் தொடா்ந்து, இருவருடைய பெற்றோரும் சமரசம் அடைந்து இருவரையும் ஊருக்கு வரும்படி அழைத்துள்ளனா். அதனால் இருவரும் தனியாா் சொகுசுப் பேருந்தில் ஒசூரிலிருந்து விஜயவாடாவுக்குப் புறப்பட்டனா்.
ஆம்பூா் அருகே பேருந்து சனிக்கிழமை இரவு வந்தபோது, சுக்ரியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. பேருந்திலேயே அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டாா்.