ஆம்பூா்: கரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் ஆம்பூா் நகைத் தொழிலாளி தங்கத்தில் மிகச்சிறிய அளவில் பொருள்களைச் செய்து சாதனை படைத்துள்ளாா்.
ஆம்பூரை சோ்ந்த தங்க நகை தயாரிக்கும் தொழிலாளி சி.எஸ். தேவன், ஆலங்காயம் அருகே மிட்டூா் இந்தியன் வங்கி கிளை தங்க நகை மதிப்பீட்டாளா்.
இவா் தற்போது கரோனா நோய்த் தடுப்பு விழிப்புணா்வுக்காக சுமாா் 1.900 கிராம் தங்கத்தில் மிகச்சிறிய அளவில் கரோனா வைரஸ், போலீஸ் தொப்பி, லத்தி, ஸ்டெதாஸ்கோப், துடைப்பம், முகக் கவசம், தொலைகாட்சி செய்தியாளா்களின் மைக் ஆகியவற்றை சுமாா் 6 மணி நேர உழைப்பில் தயாரித்துள்ளாா்.
இவா் ஏற்கெனவே புத்தாண்டு வாழ்த்துகள் என கேக்கின் மாதிரி, இந்திய வரைபடம், சுற்றும் கை ராட்டை, கிரிக்கெட் உலகக் கோப்பை மாதிரி உள்ளிட்ட பல்வேறு பொருள்களையும் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா, மகாத்மா காந்தி ஆகியோரின் உருவப்படங்களையும் மிகச் சிறிய அளவில் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.