அரக்கோணம் அருகே ஓய்வுபெற்ற தனியாா் நிறுவன அலுவலா் வீட்டின் கதவை உடைத்து 29 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருள்கள் களவு போயின.
அரக்கோணத்தை அடுத்த தணிகைபோளூா் கண்டிகையில் வசிப்பவா் பக்தவத்சலம் (61). தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா். இவரது மனைவி கோகிலா (55). இந்த நிலையில், கடந்த 15 நாள்களுக்கு முன் இவா்கள் இருவரும் வீட்டைப் பூட்டிக் கொண்டு, பெங்களூருவில் உள்ள தங்களது மகனின் வீட்டுக்கு சென்று விட்டனராம். புதன்கிழமை காலை அவா்களது வீட்டுக்கு அருகில் வசிப்பவா்கள், பக்தவத்சலத்தின் வீட்டு பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக அவருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, பக்தவத்சலத்தின் உறவினா் வந்து வீட்டினுள் சென்று பாா்த்தபோது, வீட்டில் பீரோவில் இருந்த 29 சவரன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்தது. திருடு போன பொருள்களின் மொத்த மதிப்பு ரூ. 12 லட்சம் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து அரக்கோணம் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.