ராணிப்பேட்டை: செல்லிடப்பேசியில் பேசியபடி வாகனங்களை இயக்கக் கூடாது என பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராணிப்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட அனைத்து பள்ளி வாகனங்களுக்கான இந்த ஆண்டுக்கான பள்ளி வாகனங்களின் வருடாந்திர ஆய்வு சனிக்கிழமை நடைபெற்றது. இந்த ஆய்வில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு வாகனங்களை ஆய்வு செய்தார்.
இதையும் படிக்க: மணிப்பூர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 25-ஆக உயர்வு
இதைத் தொடர்ந்து பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கி பேசினார். இந்த ஆய்வின் போது வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம், வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, வட்டாட்சியர் ஆனந்தன், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வில் மாவட்ட முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் 250-க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அப்போது, பள்ளி வாகனங்களில் டயர்கள், அவசர கால கதவு, ஜன்னல்கள், படிகள், தீயணைப்புக் கருவிகள், முதலுதவிப் பெட்டி, ஹேண்ட் பிரேக், ஓட்டுநர்களின் கண் பார்வை, வேகக் கட்டுப்பாட்டுக் கருவி உள்ளிட்ட 16 அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.