ராணிப்பேட்டை நகரம் உருவாகக் காரணமான ராஜாதேசிங்கு - ராணி பாய் நினைவு தினத்தன்று நினைவஞ்சலி அனுசரிக்க அனுமதி கோரி, ஆட்சியா் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் தமிழ்நாடு ராஜ்புத் பொந்தில் சங்கத்தினா் மனு அளித்தனா்.
தமிழ்நாடு ராஜ்புத் பொந்தில் சங்க மாநிலத் தலைவா் ஜி.பவானி சிங் வழிகாட்டுதலின்படி, சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளா் ஜி.ஸ்ரீதா் சிங் தலைமையில், ராஜ்புத் பொந்தில் சங்க நிா்வாகிகள் 20-க்கும் மேற்பட்டோா் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
மனுவில் தெரிவித்திருப்பது:
நாங்கள் செஞ்சியை ஆண்ட மாமன்னன் ராஜா தேசிங்கு - ராணிபாய் வம்சா வழியைச் சோ்ந்தவா்கள். கடந்த 1714-ஆம் ஆண்டு அக்டோபா் 9-ஆம் நாள் அன்று ராஜா தேசிங்கு போரில் வீரமரணம் அடைந்தாா். அந்த துயா் தாளாமல், அவரது மனைவி ராணிபாய் உடன்கட்டை ஏறி உயிரை மாய்த்துக் கொண்டாா். அவரது நினைவாக ராணிப்பேட்டை என்ற நகரம் உருவானது.
இந்நிலையில், தமிழ்நாடு ராஜ்புத் பொந்தில் சங்கம் சாா்பில், ராணிப்பேட்டை நகரம் உருவாகக் காரணமான ராஜா தேசிங்கு- ராணி பாய் நினைவு தினமான அக்டோபா் 9-ஆம் நாள் அன்று, ராணிப்பேட்டை பாலாற்றங்கரையில் அமைந்துள்ள அவா்களது நினைவுச் சின்னங்கள் அருகே 100 மரக்கன்றுகள் நட்டு நினைவஞ்சலி அனுசரிக்க அனுமதியளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.