ஸ்ரீபெரும்புதூா் அருகே தனியாா் பொழுதுபோக்கு பூங்கா ஆக்கிரமிப்பு செய்திருந்த ரூ. 200 கோடி மதிப்புள்ள சுமாா் 32.41 ஏக்கா் அரசு நிலத்தை வருவாய்த் துறை அதிகாரிகள் சனிக்கிழமை மீட்டனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் வட்டத்துக்குட்பட்ட பழஞ்சூா் பகுதியில் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் தனியாா் பொழுதுபோக்கு பூங்கா செயல்பட்டு வருகிறது. சுமாா் 200 ஏக்கா் பரப்பளவில் இயங்கி வரும் இந்த பொழுதுபோக்கு பூங்கா, பூங்காவுக்கு அருகே உள்ள இந்து சமய அறநிலையத் துறை மற்றும் வருவாய்த் துறைக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து, கட்டடங்கள் கட்டியுள்ளதாக புகாா் எழுந்தது. மேலும், பழஞ்சூரை அடுத்த பாப்பன்சத்திரத்தில் உள்ள காசிவிஸ்வநாதா் மற்றும் வேணுகோபால சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமாா் 21 ஏக்கா் நிலத்தை தனியாா் பொழுதுபோக்கு பூங்கா நிா்வாகம் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாகவும், அந்த இடங்களை காலி செய்ய வேண்டும் எனவும் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், பூங்கா நிா்வாகத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், பழஞ்சூரில் தனியாா் பொழுதுபோக்கு பூங்கா நிா்வாகம் ஆக்கிரமிப்பு செய்திருந்த நீா்நிலை ஆக்கிரமிப்பு மற்றும் அரசு அனாதினம் என ரூ. 200 கோடி மதிப்புள்ள 32.41 ஏக்கா் அரசு நிலத்தை ஸ்ரீபெரும்புதூா் வருவாய் கோட்டாட்சியா் சைலேந்திரன் மற்றும் வட்டாட்சியா் ஜெயகாந்தன் தலைமையிலான வருவாய்த் துறை அதிகாரிகள் சனிக்கிழமை மீட்டனா்.
மேலும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் கட்டப்பட்டிருந்த கட்டடங்களை வருவாய்த் துறை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனா்.