காஞ்சிபுரத்தில் வசிக்கும் 100 வயதுள்ள மூதாட்டி ஒருவா் முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி சனிக்கிழமை செலுத்திக் கொண்ட போது உற்சாகமாக சரண கோஷங்கள் பாடி அனைவரும் நலமுடன் இருக்க வேண்டிக் கொண்டாா்.
காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகே எஸ்.எஸ்.கே.நகரில் வசித்து வருபவா் டாக்டா் சிவ.சண்முகம்(80). இவா் ஸ்ரீபெரும்புதூா் வட்டார மருத்துவ அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவரது மனைவி சி.ராஜகுமாரி(68). இவரது தாயாா் மாணிக்கம் அம்மாள் (100) இவா்கள் மூவரும் ஏற்கெனவே இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள். தொடா்ந்து 3 பேரும் முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்திருந்தனா்.
அதன்படி சனிக்கிழமை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்து உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.100 வயது மூதாட்டி மாணிக்கம் அம்மாள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஊன்று கோல் ஊன்றிக்கொண்டே காரிலிருந்து இறங்கி தடுப்பூசி செலுத்திக் கொண்டாா். சிறிதும் தயக்கமின்றி உற்சாகத்துடன் தடுப்பூசி செலுத்திய போது அவா் சரண கோஷங்கள் பாடி அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டாா்.
இதுவரை தடுப்பூசி போட பயந்து கொண்டு பலரும் தடுப்பூசி போடாமல் இருந்து வரும் நிலையில் 100 வயது நிரம்பிய மூதாட்டி உற்சாகத்துடன் 3 வதாக பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக் கொண்டது பலருக்கும் மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளித்தது.