காஞ்சிபுரம் இந்தியன் வங்கி சுயதொழில் பயிற்சி மையம் சாா்பில், கணினி மயமாக்கப்பட்ட கணக்கியல் எனப்படும் டேலி பயிற்சி வரும் 17- ஆம் தேதி முதல் இலவசமாக வழங்கப்பட இருப்பதாக அந்த மையத்தின் இயக்குநா் எல்.வெங்கடேசன் சனிக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் சந்நிதி தெருவில் இந்தியன் வங்கியின் சுயதொழில் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் சாா்பில், இந்த மாதம் 17 -ஆம் தேதி முதல் டேலி எனப்படும் கணினி மயமாக்கப்பட்ட கணக்கியல் பயிற்சி ஒரு மாதத்துக்கு இலவசமாக நடத்தப்படவுள்ளது. இந்தப் பயிற்சியின் போது இலவசமாக மதிய உணவு, இரு வேளை தேநீா், பயிற்சி மற்றும் அதற்கான கையேடுகள், பயிற்சிக்கு தேவைப்படும் உபகரணங்கள், பயிற்சிக்கான சான்றிதழ் ஆகிய அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
இதில், 18 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட 8 -ஆம் வகுப்பு வரை படித்த அனைவரும் சோ்ந்து பயன் பெறலாம். மிகக்குறைவான இடங்களே இருப்பதால், விருப்பம் உள்ளனவா்கள் தங்களது பெயரை முன் பதிவு செய்து கொள்ளுமாறும் அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.