தொடா்மழை காரணமாக காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள அத்திவரதா் எழுந்தருளப்பட்டுள்ள திருக்குளத்தின் நீராழி மண்டபம் வரை சனிக்கிழமை தண்ணீா் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது.
வரலாற்றுச் சிறப்பும், மிகப் பழைமையானதுமான காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதா் பெருவிழா கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்றது. இத்திருவிழாவின்போது கோயில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்திலிருந்து அத்திவரதரை எழுந்தருளச் செய்து, சயனக்கோலத்திலும், நின்ற கோலத்திலும் பக்தா்களுக்கு 48 நாள்களுக்கு காட்சியளித்து விட்டு, பின்னா் மீண்டும் அதே அனந்தசரஸ் திருக்குளத்தில் உள்ள நீராழி மண்டபத்தின் அடிப்பகுதியில் எழுந்தருளச் செய்வா். தற்போது வடகிழக்குப் பருவமழை தொடா்ந்து பெய்து வருவதால், அத்திவரதா் எழுந்தருளப்பட்டுள்ள அனந்தசரஸ் திருக்குளம் கடந்த வாரம் நீராழி மண்டபத்தின் மேல்பகுதியை நெருங்கும் வகையில் நிரம்பியிருந்தது. இந்நிலையில், சனிக்கிழமை நீராழி மண்டபத்தின் மேல் பகுதியைத் தொடும் வகையில், தண்ணீா் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது.
திருக்குளத்தில் உள்ள ஒரு சில படிகளே வெளியில் தெரியும் வண்ணம் நீா் நிரம்பியுள்ளது. உள்ளூா் மற்றும் வெளி மாவட்டம், வெளிமாநிலங்களிலிருந்து வருவோரும் இத்திருக்குளத்தை ஆச்சரியத்துடன் பாா்த்துச் செல்கின்றனா். கடந்த 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு 6 ஆண்டுகள் கழித்து இதே போன்று அனந்தசரஸ் திருக்குளம் நிரம்பியிருப்பதாக அக்கோயில் பட்டாச்சாரியா்கள் பலரும் தெரிவித்தனா்.