ஏலச்சீட்டு நடத்தி ரூ.3 கோடி வரை மோசடி செய்த நபரை கைது செய்ய வலியுறுத்தி உத்தரமேரூர் காவல்நிலையத்தை 100க்கும் மேற்பட்டடோர் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் பாவோடும் தோப்பு தெருவைச் சேர்ந்தவர் பாக்கியராஜ்(39). கார் டிரைவராகவும் இருந்து வந்த இவர் கடந்த 4 ஆண்டுகளாக உத்தரமேரூர் பகுதியில் ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையிலான ஏலச் சீட்டுகளை நடத்தி வந்தார். இவர் திடீரென தலைமறைவானது தொடர்பாக அவரிடம் பணம் செலுத்தி ஏமாந்த பாதிக்கப்பட்டவர்களில் 100க்கும் மேற்பட்டோர் உத்தரமேரூரைச் சேர்ந்த கே.கண்ணன் என்பவர் தலைமையில் தலைமறைவான பாக்கியராஜ் வீட்டு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் உத்தரமேரூர் காவல் நிலையத்தையும் முற்றுகையிட்டனர். இது குறித்து கே.கண்ணன் கூறுகையில் எனக்கு மட்டும் ரூ.4.11லட்சம் தரவேண்டும். தொடர்ந்து பணம் தராமல் இருந்து வந்ததார். பின்னர் வீடு, நிலம் ஆகியனவற்றை விற்று தருவதாக கூறி வந்த நிலையில் திடீரென அவர் தலைமறைவாகி விட்டார். இது தொடர்பாக காஞ்சிபுரம் ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடமும் புகார் செய்துள்ளோம். உத்தரமேரூர் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்டோரிடம் பாக்கியராஜ் மொத்தம் ரூ.3 கோடி வரை மோசடி செய்துள்ளார்.
அவரைக் கைது செய்து பணத்தை திரும்பப் பெற்றுத்தருமாறும் அவர் தெரிவித்தார். மனுவைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து அனைவரும் காவல் நிலையத்திலிருந்து கலைந்து சென்றனர்.