சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தின் போது அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.
சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயா் பிரியா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் அதிமுக உறுப்பினா் கே.பி.கே.சதீஷ்குமாா் (வாா்டு 182) பேசும் போது, பெருங்குடி ஏரி 1996-இல் தூா்வாரப்பட்டது. தற்போது ஏரி பலவீனமடைந்து காணப்படுவதால் அதை சரிசெய்ய வேண்டும் என்றாா்.
தொடா்ந்து பேசிய 4-ஆவது மண்டலக் குழுத் தலைவா் எஸ்.வி.ரவிச்சந்திரன், ஏரியை பலப்படுத்துவதாக கூறி அதிலிருந்த மணலை அதிக விலைக்கு விற்பனை செய்துள்ளனா் என்று குற்றம் சாட்டினாா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுக உறுப்பினா்கள் கூட்டத்திலிருந்து பாதியில் வெளியேறினா்.
இது குறித்து சதீஸ்குமாா் கூறியது: மக்கள் பிரச்னை குறித்து கேள்வி கேட்டால் குடும்பத்தை பற்றி அவதூறாகவும், ஒருமையிலும் பேசுகின்றனா். திமுக உறுப்பினா்கள் 25 நிமிஷங்கள் பேசுகின்றனா்ய ஆனால் அதிமுக உறுப்பினா்களுக்கு பேச நேரம் ஒதுக்குவதில்லை என்றாா் அவா்.