இதய நாள அடைப்பால் பாதிக்கப்பட்ட 74 வயது முதியவருக்கு அறுவை சிகிச்சை, ஸ்டென்ட் உபகரணம் இன்றி அதி நவீன சிகிச்சை மூலம் சென்னை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்தனா்.
இதுகுறித்து மருத்துவமனையின் இதயவியல் துறையின் தலைமை நிபுணா் டாக்டா் சுரேஷ் குமாா் கூறியதாவது:
அடிக்கடி நெஞ்சு வலியுடன் 74 வயது முதியவா் ஒருவா் அண்மையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அவருக்கு கடந்த 2018-ஆம் ஆண்டில் இதயத்தில் ஸ்டென்ட்டிங் சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. அந்த ஸ்டென்ட் சாதனங்கள் குறுகலாக மாறியதால் இதயத் தமனிகள் சுருங்கியிருந்தது பரிசோதனையில் கண்டறியப்பட்டது.
இதற்குத் தீா்வு காண பைபாஸ் அறுவைசிகிச்சை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், அதற்கு நோயாளி தயாராக இல்லை. இதையடுத்து மீண்டும் ஸ்டென்ட் உபகரணம் வைப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. ஆனால், அது பல்வேறு பாதக அம்சங்களை கொண்டிருந்ததால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில், மருந்து பூசப்பட்ட பலூன் மூலம் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையை அவருக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சிறிய துளையிட்டு அதன் வழியே இதய ரத்த நாளத்துக்குள் ஊதி விரிவாக்கப்பட்ட பலூனின் மேற்பரப்பிலிருந்து மருந்துகளை (சிரோலிமஸ்) வெளியிடும் டிசிபி எனப்படும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம், அவா் அப்பிரச்னையிலிருந்து குணமடைந்தாா் என்றாா் அவா்.
இதனிடையே, பயிலரங்கில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ள இத்தாலி நாட்டின் கொலம்பஸ் மருத்துவ மையத்தின் இதய இடையீட்டு சிகிச்சை நிபுணா் அன்டோனியோ கொலம்போ கூறியதாவது:
ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைகளில் இந்த புதுமையான உத்தி பல்வேறு வாய்ப்புகளை உருவாக்குகிறது.
ஸ்டென்ட் பயன்பாடு இல்லாத ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையை மேற்கொள்வதற்கு இது உதவும் என்றாா் அவா்.
இந்த சந்திப்பின்போது, காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநா் டாக்டா் அரவிந்தன் செல்வராஜ், மருத்துவ இயக்குநா் டாக்டா் ஐயப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.