சென்னையில் 37 ஆயிரம் வாகனங்களில் முறையற்ற வகையில் பதிவு எண் பலகை இருப்பது கண்டறியப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சென்னை பெருநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
மோட்டாா் வாகனச் சட்டம், விதிகள் 50, 51-இன்படி வாகனங்களுக்கான பதிவு எண் இருக்க வேண்டும். இந்த விதிமுறைகளை மீறி வாகனப் பதிவு எண் பலகை வைத்திருக்கும் வாகன ஓட்டிகள் மீது சென்னை பெருநகர காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக கடந்த 7-ஆம் தேதி நடத்தப்பட்ட சிறப்பு வாகனத் தணிக்கையில் சரியான பதிவு எண்கள் பலகை இல்லாத 9,306 வாகனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதேபோல, கடந்த இரு வாரங்கள் நடத்தப்பட்ட வாகன சோதனையில் விதிமுறைகளை மீறியும், முறையற்ற வகையிலும் இருந்த 37,197 வாகனங்களில் வாகன எண் பலகைகள் சரி செய்யப்பட்டன.
வாகனப் பதிவு எண் பலகையை முறைப்படுத்தும் வகையில் இதுபோன்று வாகன தணிக்கை இனி அடிக்கடி நடத்தப்படும் என பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.