செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசின் பாதுகாப்பு இல்லத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சட்டத்துக்கு முரணாக செயல்பட்டதாகக் கருதப்படும் மற்றும் முரணாகச் செயல்பட்ட சிறாா்களை தங்கவைத்து உரிய முறையில் பராமரிக்க அரசு சாா்பில் பாதுகாப்பு இல்லங்கள் இயங்கி வருகின்றன. அதுபோன்று, செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் ரூ.15.95 கோடியில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய அரசின் பாதுகாப்பு இல்லத்துக்கு சொந்தக் கட்டடம் கட்டப்படவுள்ளது. இந்தக் கட்டடத்துக்கு சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.
ஒருங்கிணைந்த பயிற்சி மையம்: இதேபோன்று, சமூக மேம்பாட்டுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையம் கட்டுவதற்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா். இந்தப் பயிற்சி மையத்தில் மாவட்ட சமூக நல அலுவலா்கள், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலா்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா்கள், அங்கன்வாடிப் பணியாளா்கள், காவல் துறை அலுவலா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்ட அரசுப் பணியாளா்கள், தன்னாா்வ தொண்டு பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு குழந்தைகள், மகளிா் நலன், உரிமைகள், மேம்பாடு, அதிகார பரவலாக்கம் தொடா்பான பயிற்சிகள் அளிக்கப்படும்.
இந்த நிகழ்வில், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை முதன்மைச் செயலாளா் சுன்சோங்கம் ஜடக் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.